9ஆம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கு ஆய்வகச்செயல்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில் மேய்யெண் தொகுப்பு என்னும் 2 ஆவது இயலுக்கான ஆய்வகச்செயல்பாடாக வர்க்கமூலச் சுருள் வரைதல் என்னும் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் படத்தில் காணலாம்.
வர்க்கமூலச் சுருளை முதன்முதலாக கிரேக்க நாட்டுக் கணித அறிஞர் தியோடரஸ் என்பவர் அமைத்துக் காட்டினார். அதனால் இது தியோடரஸ் சுருள் என்றும், பித்தகார்ஸ் தேற்றத்தைப்பயன்படுத்தி அமைப்பதால் பித்தகாரஸ் சுருள் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலில் A 4 அளவுள்ள தாளை நீள வாக்கில் இரண்டாக மடிக்க வேண்டும் அந்த மடிப்பின்மீது தாளின் வலப்புறத்தில் வலமிருந்து சுமார் 4 செ.மீ. இடைவெளி விட்டு குறிப்பிட்ட அளவில் ( 4 செ.மீ நல்லது ) இருசமபக்க செங்கோண முக்கோணம் அமைக்கவும் செங்கோணத்தை உள்ளடக்கிய இரண்டு பக்கங்களை ஒவ்வொரு அலகாகக் கொள்ளவேண்டும். பித்தகாரஸ் தேற்றத்தின் படி செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என்பதால் இந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 2 எனக்கொள்க. இப்போது முதல் முக்கோணத்தின் கர்ணத்தை அடிப்பக்கமாகக் கொண்டு மற்றொரு செங்கோண முக்கோணத்தை அமைத்தால் அந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 3 கிடைக்கும் இதேப்போல் தொடர்ந்து ரூட் 10 வரும் வரை முக்கோணங்களை அமைத்தால் வர்க்கமூலச்சுருள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு இதனைக் கற்றுக்கொடுத்து வரையச் செய்து வண்ணம் தீட்டி அழகுபடுத்தலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வகை கணிதச்செயல்பாடுகள் எளிதாகும்.செங்கோணத்தை காகித மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.